பிரான்ஸ்: உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பங்கேற்ற ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர்கள் மற்றும் மோதல்களால், அதனுடன் நேரடி தொடர்பு இல்லாத வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்று அவர் கவலை தெரிவித்தார்.
பிரான்சின் ஈவியானில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மேற்காசியாவில் கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் மோதல்கள் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோகச் சிக்கல்கள் காரணமாக பல வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர்களால், அதில் தொடர்பே இல்லாத நாடுகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? அந்த நாடுகள் சந்திக்கும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவுவதற்காக சர்வதேச நிதி அமைப்புகள் புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இவ்வளவு நாள் ஆகும்னு நான் நினைச்சு பாக்கல!! எனக்கு ஆச்சரியமாக இருக்கு! அதிபர் ட்ரம்ப் பேச்சு!

உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை எளிதாக்க வேண்டும் என்றும், அதற்கான சர்வதேச கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஜி7 மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நடைபெற்ற சந்திப்பில் இந்தியா-பிரிட்டன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அதேபோல், கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவது மற்றும் விரிவான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றன. உலக பொருளாதார சவால்கள் குறித்து பிரதமர் மோடி முன்வைத்த கருத்துகள் மாநாட்டில் முக்கிய விவாதமாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: இந்தியா எப்போதுமே அமைதியின் பக்கமே நிற்கும்!! உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி உறுதி!