அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், போதைப்பொருள் கடத்தலை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதி கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஃபென்டானில் (Fentanyl) போதைப்பொருளை ஒரு பேரழிவு ஆயுதமாக அறிவித்து, அதை ரசாயன ஆயுதத்துக்கு ஒப்பான அச்சுறுத்தலாக வகைப்படுத்தியுள்ளது. இதன் மூலம், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் படகுகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று கிழக்கு பசிபிக் பகுதியில் மற்றொரு படகு மீது திடீர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ராணுவத்தின் தெற்கு கட்டளைப்பிரிவு (US Southern Command - SOUTHCOM) தெரிவித்துள்ளது.

SOUTHCOM தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கிழக்கு பசிபிக் பகுதியில் அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றுகொண்டிருந்த படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உளவுத்துறை உறுதிப்படுத்தியபடி அந்தப் படகில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றது. இந்த நடவடிக்கையில் மூன்று ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள் (narco-terrorists) கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவத்தினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று கூறியது. தாக்குதல் காட்சிகளைக் கொண்ட வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், வேகமாகச் செல்லும் படகு ஒரு பெரிய வெடிப்பில் சிக்கி தீப்பிடித்து எரிவது தெளிவாகக் காணப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியிடுவது யார்? விஜய் டிக் அடித்த வேட்பாளர் இவர்தான்?!
இந்த வகையான தாக்குதல் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘Operation Southern Spear’ என்ற பெயரில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் (குறிப்பாக கோகைன் மற்றும் ஃபென்டானில்) கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இந்தத் தாக்குதல்களில் சுமார் 190 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்த இலக்குகளை “நார்கோ-டெரரிஸ்ட்” அமைப்புகளுடன் தொடர்புடையவை என்று விவரிக்கிறது.

டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க மக்களின் உயிர் பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகக் கருதுகிறது. இருப்பினும், சர்வதேச அளவில் இத்தகைய தாக்குதல்கள் சட்டப்பூர்வமானதா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் தொடரும் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் இனி ஓங்கி ஒலிக்கும் பெண் சக்தி!! 23 பெண் எம்.எல்.ஏ-க்கள் தேர்வு!