மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பரஸ்பர தாக்குதல்கள் காரணமாக பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், “ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த அயோக்கியர்களுடன் இனிமேல் உறவாட விரும்பவில்லை” எனக் கூறினார். இந்த அறிவிப்பு பிராந்திய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
சமீப காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன் விளைவாக 60 நாட்களுக்கு தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. இருப்பினும், ஹார்மூஸ் நீரிணை தொடர்பான பிரச்னைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு, இரு தரப்பும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. ஹார்மூஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையாக இருப்பதால், இந்தப் பகுதியில் ஏற்படும் எந்த மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மீது பாய்ந்த டிரம்ப் - இந்தியக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, பஹ்ரைனில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் விமானத் தளத்தை இலக்கு வைத்து தாக்கியதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கு பதிலாக அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் எண்ணெய் விற்பனை தடையை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோதல் தொடரும் நிலையில், சர்வதேச சமூகம் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஐ.நா. மற்றும் பிற அமைப்புகள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிராந்திய நாடுகளான சவுதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்டவை இந்தப் பதற்றத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரானுக்கு பெரிய பின்னடைவு? ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்ப் போட்ட அதிரடி கணக்கு..!!