உத்தரபிரதேச மாநிலத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை முதலை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (12). இவர் கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவருடன் அருகில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அங்கு விவசாய பணிகள் முடிந்த பின்னர், இருவரும் அருகே ஓடும் ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
ஆற்றில் சிறுவனும், அவரது உறவினரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மறைந்திருந்த முதலை சிறுவனை தாக்கியது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் சிறுவனை முதலை கடித்து இழுத்துச் சென்றது. இதனை பார்த்த உறவினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக உதவிக்காக தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து பல மணி நேரம் ஆற்றில் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு சிறுவனின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுவனின் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் முதலை நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பஹ்ராயிச் மாவட்டம் உள்ளிட்ட உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வனத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: அமித் ஷா - யோகி ஆதித்யநாத் பனிப்போருக்கு முற்றுப்புள்ளி! மோதலை முடித்து வைத்தது பாஜக!