மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதிய விவகாரங்களைப் பரிசீலிக்கும் 8-வது ஊதிய வரைவுக் குழுவின் முக்கியக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டு ஆலோசனை குழுவின் (NC-JCM) செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகள் விரிவாக ஆராயப்பட்டன.
கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பான விஷயங்கள். தற்போது நடைமுறையில் உள்ள ஆண்டுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மாத மருத்துவ படியை ரூ.1,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்துவது, விடுப்பு பணமாக்கல் (Leave Encashment) வரம்பை 300 நாட்களிலிருந்து 400 நாட்களாக அதிகரிப்பது ஆகியவை குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்றது.
குறிப்பாக, தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நலனை முன்னிறுத்தி இத்தகைய மாற்றங்கள் அவசியம் என்பது தரப்புகளின் வாதம்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 40 இடங்களில் ரெய்டு..! மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு குறி..! அதிரடி நடவடிக்கை..!
அதிரடி சம்பள உயர்வு முன்மொழிவு: எப்.என்.பி.ஓ. (FNBO) மூலம் முன்மொழியப்பட்ட ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• நிலை 1: ரூ.18,000-லிருந்து ரூ.54,000
• நிலை 2 (குரூப் சி): ரூ.19,900-லிருந்து ரூ.59,700
• நிலை 3: ரூ.21,700-லிருந்து ரூ.65,100
• நிலை 4: ரூ.25,500-லிருந்து ரூ.76,500
• நிலை 5: ரூ.29,200-லிருந்து ரூ.87,600

இதேபோல், நிலை 6 முதல் நிலை 18 (அமைச்சரவை செயலாளர்) வரையிலான பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயரும் என முன்மொழிவுகள் உள்ளன. உதாரணமாக, நிலை 18-ல் ரூ.2,50,000-லிருந்து ரூ.8,12,500 ஆக உயரும். இது லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
துறை வாரியாக உள்ள வேறுபாடுகளைச் சரி செய்ய, வரைவுக் குழு உறுப்பினர்கள் மார்ச் மாதம் வரை டெல்லியிலேயே தங்கி பணியாற்ற உள்ளனர். இறுதி முடிவுகள் எட்டப்பட்ட பிறகு, அந்தக் கூட்டு குறிப்பாணை நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 8-வது ஊதியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
இந்தப் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் பட்சத்தில், 2026 ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இறுதி அறிக்கை மத்திய அமைச்சரவைக்கு எவ்வளவு விரைவில் சமர்ப்பிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஊதிய உயர்வு கிடைக்கும் என ஊழியர் அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!