சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியா–சீனா இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த பதற்றத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டதுடன், எல்லைப் பகுதிகளில் இரு தரப்பு ராணுவமும் அதிக அளவில் குவிக்கப்பட்டன.
இதையடுத்து, எல்லையில் பதற்றத்தை குறைத்து இயல்புநிலையை ஏற்படுத்த இந்தியா–சீனா இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து சில பகுதிகளில் இரு நாடுகளும் தங்களது படைகளை பின்னுக்கு அழைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டன. இருப்பினும், எல்லை தொடர்பான பல்வேறு விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.
இதையும் படிங்க: 23 நிமிடங்கள்... 9 பயங்கரவாத முகாம்கள்! மோடியின் அதிரடி உத்தரவு; ஆபரேஷன் சிந்தூர் ரகசியங்களை வெளியிட்ட அஜித் தோவல்!
இந்த சூழலில், இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நடைபெறும் சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியான அஜித் தோவல் சீனா சென்றுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த முக்கியமான பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே, சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை அவர் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வது குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பொருளாதாரம், அரசியல் மற்றும் பலதரப்பு அமைப்புகளில் இந்தியா–சீனா இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த பின்னணியில் அஜித் தோவலின் சீனா பயணமும், சீன உயரதிகாரிகளுடனான சந்திப்புகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக எல்லைப் பதற்றத்துக்குப் பிறகு இருதரப்பு உறவுகளை படிப்படியாக சீரமைக்கும் முயற்சியில் இந்த பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்குமா என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஐஏஎஸ் அதிகாரி என நடித்து மோசடி? வீட்டில் சிக்கிய ‘ரகசிய ஏஜென்ட்’! போலீஸ் சோதனையில் பகீர்!