நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், ஜூலை 20-ம் தேதி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பெரிய அளவிலான இளைஞர்கள் பேரணி நடைபெற்றது.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் பேரணியின்போது போலீசார் தடியடி நடத்தியதாகவும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மறுபுறம், 116 போலீசார் காயமுற்றதாகவும், 70 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பேரணியின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் அதிர்ச்சியூட்டும் வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அமைதியாக தங்கள் கோரிக்கையை முன்வைத்த இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில், “இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் மிக முக்கியம். மாணவர்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஜூலை 27-ல் தமிழ்நாடு தழுவிய போராட்டம்! விசிக தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு!
எனினும், பிரதமரின் இந்த அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, புகழ்பெற்ற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மாணவர்களுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உதவியாளர் தத்தா அவாரி இதனை உறுதிப்படுத்தினார்.
நீட் வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் கல்வித்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!