அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலால் ஈரானுடன் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
போர் தொடங்கிய பிறகு ஈரான் ஜலசந்தியை மூடியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்தியாவிலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவகங்கள், தேநீர் கடைகள் பல இடங்களில் மூடப்பட்டன. பதுக்கல், கள்ளச்சந்தை அதிகரித்ததால் மத்திய அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தியது.
இதையும் படிங்க: நீடிக்கும் போர் பதற்றம்! சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! வார்னிங் கொடுக்கும் ஐநா!
இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் உடனடியாக தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஈரான் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளித்துள்ளது. இதனால் எல்.என்.ஜி. மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றும் இந்திய கப்பல்கள் தடங்கலின்றி வரும்.

முதல் கப்பலாக, சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட லைபீரியா கொடியுடன் கூடிய 'ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்' என்ற எண்ணெய் கப்பல் நேற்று மும்பை துறைமுகத்துக்கு பாதுகாப்பாக வந்தடைந்தது. இது எரிபொருள் விநியோகத்தில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் நாடுகளின் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஜெய்சங்கர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீயான் நோல் பரோட் ஆகியோருடன் பேசி, கடல் வழிகளில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறார்.
பாரசீக வளைகுடாவில் தற்போது 28 இந்திய எண்ணெய் கப்பல்கள் இயங்கி வருகின்றன. இதில் 24 கப்பல்கள் ஜலசந்தியின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 778 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் தாய்லாந்து சரக்கு கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தால், வெளியுறவு அமைச்சகம் இவர்களின் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதற்கிடையே சீனாவுக்கு எண்ணெய் அனுப்பும் ஈரான் கப்பல்கள் டிராக்கிங் கருவியை அணைத்து ரகசியமாக பயணிக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அவை ஹார்முஸ் வழியாக சென்றது உறுதியாகியுள்ளது.
மத்திய அரசின் தொடர் முயற்சிகளால் விரைவில் எரிபொருள் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கச்சா எண்ணெய் கப்பலை தகர்க்க சதி! கண்ணி வெடி வைக்கும் படகுகள்! தாக்கி அழிக்கும் அமெரிக்கா!