வரலாற்றுச் சிறப்பும் இயற்கை எழிலும் கொண்ட தருமபுரி மண்ணில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அப்போது தருமபுரி மாவட்டத்திற்கும் தனது அரசியல் பயணத்திற்கும் உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பை அவர் நினைவுகூர்ந்தார்.
தருமபுரி மாவட்டத்தை மறக்க முடியாத ஊர் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், பெண்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண் இது எனப் புகழாரம் சூட்டினார். 1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி வைத்தது இதே மண்ணில்தான். தான் துணை முதலமைச்சராக இருந்தபோது, பல மணி நேரம் நின்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கியதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவுத் திட்டம் மற்றும் ஊரகப் பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் ஆகியவற்றைத் தருமபுரியில்தான் தொடங்கி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயப் பெருமக்களுக்காகத் தனது அரசு செய்துள்ள புரட்சிகரமான மாற்றத்தைச் சுட்டிக்காட்டினார். தொடக்க வேளாண்மைச் சங்கத்தில் ஒரே நாளில் இணைய வழியில் விண்ணப்பித்து கடன் பெறும் திட்டத்தை இதே தருமபுரியில் தொடங்கி வைத்ததை அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஒரு டம்மி பீஸ்! வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருது! மதுரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
பாஜகவின் சித்தாந்தம் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்: பாஜக 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பிற்போக்குச் சமூகத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறது. மக்களை மயக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி, ஒரு சிலர் மட்டும் வளர வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு எனச் சாடினார்.
ஒன்றிய அரசு கொண்டு வரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சீண்டினார். இது வெறும் தேர்தல் அல்ல, இது தமிழ்நாட்டின் உரிமைக்கானப் போர். பழனிசாமி அவர்களே.. இந்த விவகாரத்திலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள் என அவர் எச்சரித்தார்.
தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கவும், மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தருமபுரி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: பியூஷ் கோயலுக்கு நாவடக்கம் தேவை! தமிழகத்தை விமர்சித்த மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!