இந்தியாவில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாக, டெங்கு தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம், டெங்கு தடுப்புக்காக உருவாக்கப்பட்ட QDENGA (க்யூடெங்கா) தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றுள்ளது. 4 முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாம் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் முக்கிய அம்சமாக, முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் இதை செலுத்திக்கொள்ளலாம் என்பதும், தடுப்பூசி போடுவதற்கு முன் டெங்கு தொற்று இருந்ததா என்பதை கண்டறியும் பரிசோதனை தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை மேலும் எளிதாகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மருந்து சந்தைகளின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “க்யூடெங்கா தடுப்பூசி 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, உலகளவில் 32 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்த அங்கீகாரம் இந்தியாவில் டெங்கு தடுப்பை வலுப்படுத்துவதில், ஒரு முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது. ஏழு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட நீண்டகால தரவுகளின்படி, இந்த தடுப்பூசியானது நான்கு டெங்கு வைரஸ் வகைகளால் ஏற்படும் டெங்கு தொற்றால் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! ஆந்திராவில் 4 பேர் பலி! அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

டெங்கு பரவலாக உள்ள நாடுகள் மற்றும் மற்ற பிராந்தியங்களில், 28,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 19 முதற்கட்ட, இரண்டாம் மற்றும் மூன்றாம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்பு, இந்தியாவில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 4 முதல் 60 வயது வரையிலான மக்களிடம் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பீடு செய்வதற்காக, இந்தியாவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட DEN-302 மருத்துவ பரிசோதனையின் முடிவுகளும் இந்த முடிவை ஆதரித்துள்ளன” என்றார்.
QDENGA தடுப்பூசி இரண்டு டோஸ்களாக, மூன்று மாத இடைவெளியில் தோலுக்கு கீழ் 0.5 மில்லி அளவில் செலுத்தப்படும். உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்தகுதி சான்றிதழையும் இந்த தடுப்பூசி பெற்றுள்ளது. மேலும், UNICEF மற்றும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (PAHO) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் இதை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளன. இந்தியாவில் டெங்கு பாதிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய தடுப்பூசி பொதுச் சுகாதாரத் துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு... பகீர் ரிப்போர்ட்!