பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர போர் வெடித்தது. பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த நம் ராணுவம், போருக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் பந்தாடியது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை பிரமோஸ் ஏவுகணைகளை வீசி நம் ராணுவம் தகர்த்தது.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சியது.
போரை நிறுத்திக்கொள்வோம் என்று மன்றாடியதால் இந்தியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. இது தான் நடந்தது என்று உலகத்துக்கே தெரியும்.
ஆனால் போர் நிறுத்தம் வந்த பிறகு மீண்டும் பாகிஸ்தான் வாய் சவடால் விடுகிறது. இந்தியாவை வேண்டும் என்றே சீண்டுகிறது. இந்த சேட்டையின் உச்சமாக கராச்சி கடற்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அசிம் முனீர் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியா விமானத்தை சுட்டு வீழ்த்திய பாக்.,? உளறிக்கொட்டிய கடற்படை கேப்டனால் சிக்கலில் பாஜக..!

அவர் கூறியது: எந்த காரணமும் இன்றி பாகிஸ்தான் மீது 2 முறை இந்தியா தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது அத்து மீறிய செயல். நம் நாட்டை சுற்றி பதற்ற நிலை நிலவுவதற்கு இந்தியா தான் முக்கிய காரணம்.
இனி எப்போதாவது பாகிஸ்தானை இந்தியா சீண்டினால், அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்படுகிறது. பிராந்திய அமைதிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க போராடுகிறது. ஆனால் இந்தியா வேண்டும் என்றே பதற்றத்தை உண்டு பண்ணுகிறது என்று அசிம் முனீர் பேசினார். காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை சீண்டினார். காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இதற்கு எதிராக போராடும் காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

ஐநா சபையில் தீர்மானம் மூலமும் காஷ்மீர் மக்களின் விருப்ப படியும் காஷ்மீர் விவகாரத்தில் நியாயமான தீர்வு கிடைக்க பாகிஸ்தான் கடுமையாக வாதாடும் என்று அசிம் முனீர் கூறினார். காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தம் என்று பஹல்காம் போர் நடப்பதற்கு சில நாட்கள் முன்பும் சொல்லி இருந்தார்.
‛காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு போன்றது. அது எப்பவும் எங்களின் கழுத்து நரம்பாகவே இருக்கும். அதே நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்’ என்று வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்களிடம் சொன்னார். மீண்டும் அவர் காஷ்மீர் பற்றி பகிரங்கமாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டியிருப்போம்.. ஆனா! ஆபரேசன் சிந்தூரில் நடந்த அரசியல்.. உண்மையை உடைத்த கேப்டன்..!