ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அடுத்தடுத்த முக்கிய ஏவுதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டு, திட்டமிட்டபடி இ.ஓ.எஸ்.-05 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சூரிய உதயத்துக்கு முன்பாகவே இந்த முக்கியமான ஏவுதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்ட அவர், நாட்டுக்கு தேவையான சிறந்த சேவைகளை வழங்க இஸ்ரோ தொடர்ந்து முழு முயற்சியுடன் செயல்படும் என்றார். தற்போதைய வெற்றியுடன் பணிகள் முடிவடையவில்லை என்றும், எதிர்காலத்தில் எதிர்பார்ப்புகளை தாண்டிய சாதனைகளை உருவாக்கும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் பாய்ந்த GSLV-F17! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ISRO! பிரதமர் மோடி பாராட்டு!

இந்த வெற்றிக்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நாராயணன் நன்றி தெரிவித்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர்களான ராதாகிருஷ்ணன், சோம்நாத் மற்றும் கிரண்குமார் ஆகியோர் ஏவுதலை நேரில் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நடப்பு நிதியாண்டில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிடப்பட்டுள்ள மேலும் 6 ஏவுதல்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். முக்கியமான விண்வெளித் திட்டங்கள் உட்பட அடுத்தகட்ட ஏவுதல்களுக்கான ஏற்பாடுகள் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
திட்டமிட்டுள்ள ஏவுதல்களை நடப்பு ஆண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “அதிக வேலைக்கு பரிசு இன்னும் அதிக வேலைதான்” என்ற கருத்தை சுட்டிக்காட்டிய நாராயணன், இஸ்ரோவின் முன் ஏராளமான பணிகள் இருப்பதாகவும், அவற்றை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டுக்கு சேவை செய்வோம் என்றும் கூறினார்.
இந்தியாவின் விண்வெளித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் இஸ்ரோ தொடர்ந்து முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!