கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதனையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட வீரர்கள் 10 நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, நிலச்சரிவில் சிக்கியவர்களை உயிருடனும், சடலமாகவும் மீட்டனர். கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியது.

இந்த நிலச்சரிவில் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து மிகவும் கஷ்டப்பட்டனர். இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் நினைவுகளே இன்னும் மறவாத நிலையில் தற்போது வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..
வயநாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாகப் பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கனமழையால் சுரல்மலாவின் சாலியார் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான புன்னப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் சுரல்மலாவின் முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், மேப்பாடி, முண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, பெய்லி பாலம் அருகே வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது.

மாவட்ட ஆட்சியர் இதுவரை நிலச்சரிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், முண்டகை பகுதியில் ஆற்றில் மண் கலந்த நீர் பாய்ந்து வருவதாகவும், 150-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவால் உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வயநாடு உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரத்த வெள்ளத்தில் தாய், மகள்.. அடர்ந்த காட்டில் இளைய மகள்.. வயநாட்டில் நடந்தது என்ன..?