கடந்த 2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்பின் இந்தியா- சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டநிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவையை தொடக்க இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.
இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவில் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் வரும் கோடை காலத்தில் திபெத்தில் உள்ள மானசரோவர் புனித யாத்திரைக்கு செல்லவும், இரு நாடுகளுக்குஇடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கசானில் இந்தியப் பிரதமர் மோடியும், சீனப் அதிபர் ஜி ஜிங்பிங்கும் சந்தித்துப் பேசினர் அப்போது இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை துளிர்க்கவும், மக்கள் நலனுக்காகவும், உறவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்தனர்.
இதன் வெளிப்படாக, இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி சமீபத்தில் பெய்ஜிங் சென்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலரைச் சந்தித்துப் பேசி, ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதன்படி, மானசரோவர் யாத்திரை வரும் கோடை காலத்தில் இரு நாடுகளின் ஆலோசனைக்குப்பின் தொடங்கும். கைலாஷ் சிகரம் மற்றும் திபெத்தில் உள்ள மானசரோவர் ஏரி ஆகியவற்றுக்கு செல்லும் யாத்திரை கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
மீண்டும் யாத்திரை தொடங்க இருந்த நிலையில் கல்வான் பகுதியில் இரு நாடுகளின் ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலால் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் தொடங்க இருக்கிறது.
மேலும், இந்தியா –சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தையும் விரைவில் தொடங்கவும் இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இரு நாடுகளின் தொழில்நுட்ப அதிகாரிகளும் விரைவில் சந்தித்துப் பேசியபின் விமான சேவை தொடங்கும்.
இதையும் படிங்க: 'சீமான்- பிரபாகரன் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதில்லை..!' ரகசியத்தை உடைத்த புகைப்பட தடயவியல் நிபுணர்..!