நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரில் 35 பாலங்கள் மற்றும் 45 தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேபாளத்தின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், பல்வேறு இடங்களில் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா’ நிறுவனம் மூலம் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேர் என மொத்தம் 57 பேர் கைலாஷ் மானசரோவர் ஆன்மீகப் பயணத்திற்காக நேபாளம் சென்றுள்ளனர். அவர்கள் பயணித்த 3 பேருந்துகளில் நடுவில் சென்ற ஒரு பேருந்து திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நேபாளம், சீனாவில் கொடூர வெள்ளம்... பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்டெரெஸ் இரங்கல்!
அந்த பேருந்தில் இருந்த 20 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மாற்றுப் பாதை வழியாக நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த ‘மகாதேவ் கைலாஷ் யாத்ரா’ நிறுவனம் மூலம் மேலும் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு பயணக் குழுக்களையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ளனர்.
மகாதேவ் கைலாஷ் யாத்ரா மூலம் சென்ற 49 பேரின் தற்போதைய நிலையை கண்டறிய தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுக்கள் மூலமாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாள அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அனைவரையும் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கியுள்ள தமிழர்களின் நிலையை தொடர்ந்து கண்காணித்து, அவர்களை விரைவாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நேபாளத்தை ஏன் விடாமல் துரத்துகிறது பேரழிவு? 5 ஆண்டுகளில் நடந்த பயங்கர வெள்ளம், நிலச்சரிவுகளின் அதிர்ச்சி பின்னணி!