இந்திய பாதுகாப்பு அமைப்புகள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இன்டர்போல் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த புதிய திட்டத்துக்கு ‘ஆபரேஷன் குளோபல் ஹன்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் முதல் வெற்றியாக, பிரபல தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா துருக்கியில் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
சலீம் டோலா வெளிநாடுகளில் இருந்தபடி பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியுடன் துருக்கி அரசு ஒத்துழைப்பு வழங்கியது. இந்த வெற்றி இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஸ்டாலின் தான்..! சிறுவாபுரி முருகனை தரிசித்த அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை..!!
ஆபரேஷன் குளோபல் ஹன்ட் திட்டத்தின்படி, இன்டர்போல் மூலம் உலகம் முழுவதும் தப்பியோடிய குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களை நாடு கடத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த திட்டம் முக்கிய இலக்காக உள்ளது.

இதற்காக இன்டர்போல் மாநாட்டில் சிறப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, சிறப்பு விமானங்கள் மூலம் குற்றவாளிகளை இந்தியா அழைத்து வருவது இதன் முக்கிய நோக்கமாகும்.
விசாரணை அமைப்புகள் நடத்திய தீவிர தேடுதல் மூலம், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைக்கும் 11 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்புடைய ஆசிப் இக்பால் மெமன், ஹஸ்ரா இக்பால் மெமன், ஜுனைத் இக்பால் மெமன், ஹர்மீத் சிங், பிரதீப் சிங், பரம்ஜித் தலிவால், சன்னி கோசல், விஸ் ஜஸ்விந்தர் சிங், தைஷான் பிஷ்ணோய், ஹாலி சலீம், சந்தீப் துனியா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஜஸ்விந்தர் சிங் மற்றும் சன்னி கல்ரா ஆகியோர் ஏற்கெனவே துபாய் போலீசாரிடம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் குற்ற ஒழிப்பு பணி பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து இயங்கும் போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத நெட்வொர்க்குகளுக்கு பெரும் தாக்குதலாக இது அமையும். மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றன.
இந்திய மக்கள் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை இந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
இதையும் படிங்க: எகிறியது சமையல் எரிவாயு விலை: சிறு வணிகர்களுக்கு நெருக்கடி..!! சிபிஐ கடும் கண்டனம்..!!