இந்திய கிரிக்கெட் உலகையே அதிரவைக்கும் ஒரு பெரும் வணிக ஒப்பந்தமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ₹16,732 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு கிரிக்கெட் அணி இவ்வளவு பிரம்மாண்டமான விலைக்கு கைமாறுவது இதுவே முதல்முறையாகும். ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், அமெரிக்காவின் போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் (Blackstone) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கிய ஒரு பலமான கூட்டணி இந்த அணியை வாங்கியுள்ளது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL - Diageo) நிறுவனத்திடமிருந்து ஆர்சிபி அணியின் 100 சதவீத உரிமைகளையும் இந்த புதிய கூட்டணி பெற்றுள்ளது. இதில் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் (WPL) அணி ஆகிய இரண்டும் அடங்கும். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மற்றும் விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் பிராண்ட் மதிப்பு ஆகியவற்றால் ஆர்சிபியின் விலை இந்த அளவுக்கு எகிறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குனர் ஆர்யமன் விக்ரம் பிர்லா ஆர்சிபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். (இவர் ஏற்கனவே ஒரு கிரிக்கெட் வீரராக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது).
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!
டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி துணைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
போல்ட் வென்ச்சர்ஸின் டேவிட் பிளிட்சர் மற்றும் பிளாக்ஸ்டோனின் வைரல் படேல் ஆகியோர் இந்த நிர்வாகக் குழுவில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
மார்ச் 28 அன்று ஐபிஎல் 2026 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், நடப்பு சாம்பியன்களான ஆர்சிபி புதிய நிர்வாகத்தின் கீழ் தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளக் களம் இறங்குகிறது. "இந்தியா மட்டுமன்றி உலகளாவிய அளவில் ஒரு சிறந்த விளையாட்டு நிறுவனமாக ஆர்சிபியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்" என ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விற்பனை மூலம் ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!