சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில், மத சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த விசாரணையின் 8ஆம் நாளான நேற்று, நீதிமன்றத்தில் சுவாரசியமான விவாதங்கள் நடைபெற்றன.
சபரிமலை விவகாரத்தில் ஏழு முக்கிய அரசியல் சாசன கேள்விகளை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. பந்தள அரச குடும்பத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “நீதிமன்றத்தின் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மத ரீதியான சடங்குகள், சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளில் தலையிடும்போது நீதிமன்றங்கள் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்” என்று வாதிட்டார்.
மேலும், வழக்கு தொடர்ந்தவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்றும், அய்யப்பன் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பியவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த வாதத்தின்போது நீதிபதி ஜாய்மால்யா பக்சி, “ஒரு நடைமுறை மத ரீதியானதா என்பதை எப்படி உறுதி செய்வது? ஹிந்து மதத்திற்குள் ஆயிரக்கணக்கான நடைமுறைகள் உள்ளன. அவற்றை எந்த அளவுகோலால் சோதிப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: படைத்தவனுக்கும் படைப்புக்கும் இடையே பாகுபாடு இருக்குமா? சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் நறுக் கேள்வி!

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத்துராஜ், சைவ சமயத்தில் 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் இறைச்சியைப் படைத்து வழிபட்டு முக்தி அடைந்ததை உதாரணமாகக் காட்டினார். “ஒரு பக்தரின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்தது சடங்கு. எனவே, ஒரு சடங்கு மதத்தின் இன்றியமையாத பகுதியா என நீதிமன்றம் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கையற்றவருக்கு இதில் தலையிட உரிமை இல்லை” என்றார்.
விசாரணையின்போது தவுதி போரா சமூகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, “அறிவு எங்கிருந்து வந்தாலும் வரவேற்க வேண்டும்” என்றார். அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா, “ஆனால், வாட்ஸாப் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் தகவல்கள் இங்கே செல்லாது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இதனால் உச்ச நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
இந்த விசாரணை மத உரிமைகள், சுதந்திரம் மற்றும் அரசியல் சாசனத்தின் எல்லைகள் குறித்து முக்கியமான விவாதங்களை முன்னெடுத்துள்ளது. வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பான இறுதி முடிவு, நாடு முழுவதும் உள்ள பல கோயில்களின் மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோசடி கணக்குகள்!! அனில் அம்பானிக்கு மேலும் பின்னடைவு! ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்!!