தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மகத்தான வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கப் பிரபல நாட்டுப்புறக் கலைஞர் வேல்முருகன் கோவை மருதமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
செவ்வாய்க்கிழமையான இன்று ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த மருதமலை முருகனை தரிசித்த வேல்முருகன், தனது தனித்துவமான குரலில் தவெக வெற்றியைப் போற்றும் வகையில் பாடல் பாடினார். தவெக கொடியில் இடம்பெற்றுள்ள சேவல் சின்னத்தை மையப்படுத்தி, "சேவல் கொடி பறக்குது... சேவல் கொடி பறக்குது..." என்ற பாடலைப் பாடி அங்குள்ள பக்தர்களை உற்சாகப்படுத்தினார்.
மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து தவெக-விற்குப் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மருதமலை முருகனின் அருளால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். தனது ராசியும் நட்சத்திரமும் விஜய்யின் ராசி மற்றும் நட்சத்திரத்துடன் ஒத்துப்போவதாகக் குறிப்பிட்ட வேல்முருகன், தவெக-வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத தவெக..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?? லிஸ்ட் இதோ..!!
செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், விஜய்யின் அரசியல் மற்றும் சினிமா பயணம் குறித்துப் பேசியதாவது, சினிமாவில் இருந்து வந்துள்ள விஜய், அங்குள்ள கஷ்ட நஷ்டங்களை அறிந்தவர் என்பதால் சினிமாவையும் சிறப்பாக வைத்திருப்பார், நாட்டு மக்களையும் சிறப்பாக வழிநடத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
மறைந்த நடிகர் விஜயகாந்தின் தம்பியாக, அவரது ஆசிர்வாதம் பெற்று அவரது வழியில் விஜய்யின் பயணம் சிறப்பாக இருக்கும் என்றார். தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் 'மகுடம்' படத்தில் பாடி வருவதாகவும், விஜய்யின் படங்கள் எப்போது வந்தாலும் மக்கள் அதனைப் பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், வேல்முருகனின் இந்த ஆன்மீக வாழ்த்து விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த விஜய்: தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம்!