திருச்சி: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசியல் சூழலை கடுமையாக விமர்சித்தார்.
“விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தவெக ஆட்சியை 6 மாதம் கூட தாங்குமா என்பது சந்தேகம்தான். தவெக ஆட்சி ஏற்கெனவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பதவி ஏற்றதன் மூலம் கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவின் மானம் போய்விட்டது” என்று தினகரன் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியிலும், தேர்தலுக்குப் பின் பதவிக்காக இன்னொரு கூட்டணியிலும் இணைவது தவெகவின் அரசியல் என்று விமர்சித்த அவர், “முதலமைச்சர் விஜய் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியில் இருந்து நிஜ ஆட்சிக்கு வர வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு துதி பாடினா எப்புடி?! அடுத்தடுத்து விலகும் மாவட்ட செயலாளர்கள்! டிடிவி தினகரன் அதிர்ச்சி!
அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது அதிமுக ஆதரவை நம்பியே ஆட்சி நடத்துவதாகச் சாடினார்.

“செங்கோட்டையன் தனது சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்துக்கொண்டு அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறார். ஜெயலலிதாவின் ஆன்மா இதை ஒருபோதும் மன்னிக்காது” என்று தினகரன் கடுமையாக தாக்கினார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது நியாயமற்றது என்றும், எடப்பாடி பழனிசாமி நியமிக்கும் கொறடாவின் உத்தரவே செல்லும் என்றும் எச்சரித்தார். ஆதரவு அளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் என்றும் தினகரன் எச்சரித்தார்.
அமமுக சார்பில் வெற்றி பெற்ற காமராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறிய தினகரன், “அமமுக அல்லது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம்” என்று மிரட்டல் விடுத்தார்.
தவெக ஆட்சி எதிர்கொள்ளும் சிரமங்களை சுட்டிக்காட்டிய தினகரன், வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!