இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தொகை தற்போது இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவும், அதை சரியான உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய நிதியமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, இந்த விவரங்களை வெளியிட்டார். 2026 ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மொத்தம் ரூ.60,518 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல், காப்பீட்டுத் துறையில் காப்பீடு தாரர்களால் உரிமை கோரப்படாத தொகை பிப்ரவரி மாத இறுதி வரை ரூ.8,973.89 கோடியாக உள்ளது. மேலும், செபியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டாளர்களால் உரிமை கோரப்படாத முதலீட்டுத் தொகை ரூ.3,749.34 கோடியாக பதிவாகியுள்ளது. இந்த உரிமை கோரப்படாத தொகைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களது வாரிசுகள் தொடர்பு கொள்ளாமல் இருப்பதால் குவிந்துள்ளன.
இதையும் படிங்க: பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!
பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தப் பணத்தை மீட்டெடுக்கவும், உரிய உரிமையாளர்களை விரைவாக அடையாளம் காணவும் வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு தரப்பில், உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளர்களை விரைந்து கண்டறியும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் தளங்கள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கை மூலம், பணத்தை இழந்திருக்கும் பொதுமக்கள் தங்கள் உரிமையை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. உரிமை கோரப்படாத பணத்தை மீட்டெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், காப்பீட்டுப் பாலிசி அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு ஆவணங்களுடன் உரிய வங்கி அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த முயற்சி நாட்டின் நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மக்களின் பணத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கீழடி 11 ஆம் கட்ட அகழாய்வு பணிகள்... கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!