உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மந்தாகினி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சித்ரகூட் பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக சித்ரகூட்டில் உள்ள மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. அபாய அளவான 4.1 அடியை தாண்டிய நீர்மட்டம் 4.39 அடியை எட்டியுள்ளது.
ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்ததால் ராம்காட், நிர்மோஹி அஹாரா உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நூற்றுக்கணக்கான கடைகள், மடங்கள் மற்றும் கோவில்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆனைமங்கலம் செப்பேடுகள்.! ஜவாஹிருல்லா வைத்த முக்கிய கோரிக்கை..! அமைச்சர் ராஜ்மோகன் வாக்குறுதி..!
ராம்காட் முதல் ஹனுமந்தாரா வரையிலான பகுதியில் இருந்த பாலமும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கார்வி பகுதியில் உள்ள பாலத்தின் மீது வெள்ளநீர் அதிகமாக சென்றதால் ஜான்சி–மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த 251 கிராமங்களில் 1.71 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக 447 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மறுபுறம், ஒடிஷாவிலும் கனமழை தொடர்கிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி காரணமாக பாலசோர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்களும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்... நினைத்ததை எல்லாம் பேசக்கூடாது.!! வைகோ தடாலடி.!!