டெஹ்ரான்/வாஷிங்டன்: மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது பெரும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தளங்கள் 5,000 பவுண்ட் எடையுள்ள 'பங்கர் பஸ்டர்' (bunker buster) ஆழ ஊடுருவும் குண்டுகளால் தகர்க்கப்பட்டுள்ளன.
ஈரான் ஜலசந்தியை முழுமையாக மூடுவதாக எச்சரித்து, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிக்காது என்றும், மீறினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்திருந்தது. இதனால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜலசந்தியை பாதுகாக்க உதவுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், பல நாடுகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன.
இதையும் படிங்க: கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

இந்நிலையில், அமெரிக்க மத்திய தளபதி (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், "ஈரான் கடற்கரையோரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள கடினமான ஏவுகணைத் தளங்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தளங்களில் இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. இதனை நீக்குவதற்காக பல 5,000 பவுண்ட் ஆழ ஊடுருவும் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் ஈரானின் இராணுவ தளங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜலசந்தி மூடப்பட்டதால் உலகின் 20 சதவீத எண்ணெய் வழித்தடம் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா தனியாகவே ஜலசந்தியை திறக்க முயல்வதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தத் தாக்குதல் அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. உலக நாடுகள் எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகப் பிரச்சினைகளால் பெரும் அச்சத்தில் உள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஜலசந்தியை மீண்டும் திறக்க உதவுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!