இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயம் பொதுமக்களிடையே பரவியுள்ள நிலையில், அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கருப்புச் சந்தையில் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இத்தகைய செயல்களைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்கப்படும் என்ற செய்தி சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு தளங்களில் வேகமாகப் பரவியது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எல்.பி.ஜி. இறக்குமதி பாதிக்கப்படலாம் என்றும், அதனைச் சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் எடையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்தத் தகவல் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!
ஏற்கனவே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சூழலில், வீட்டு உபயோக சிலிண்டர்களும் பாதிக்கப்படும் என்ற அச்சம் மேலும் அதிகரித்தது. இந்த வதந்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இத்தகைய தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “வீட்டு உபயோக சிலிண்டரின் எடை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாகக் குறைக்கப்படும் என்ற செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை. இறக்குமதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும், சிலிண்டரின் எடையைக் குறைக்கும் எந்தவித திட்டமும் அரசுக்கோ, எண்ணெய் நிறுவனங்களுக்கோ இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெறும் யூகங்களும் வதந்திகளுமே. பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று அவர் வலியுறுத்தினார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்குத் தேவையான போதிய இருப்பு உள்ளது என்றும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
“14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர்கள் எந்த மாற்றமும் இன்றி, முழு எடையுடன் தொடர்ந்து வழங்கப்படும். பொதுமக்கள் அமைதியாக இருந்து, தேவைக்கேற்ப மட்டும் சிலிண்டர்களை முன்பதிவு செய்யுமாறு” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின் மூலம், வதந்திகள் காரணமாக ஏற்பட்ட பீதியைப் போக்க அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!