மதுரையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரைக்கு, அதே கட்சியைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்பதுரை சமீபத்தில், “ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இருப்பதால் இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும். லோதா கமிட்டி பரிந்துரையின்படி ஒருவர் இரு பொறுப்புகளை ஒரே நேரத்தில் வகிப்பது தவறு” என விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துக்கு சோலைராஜா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்.
சோலைராஜா கூறுகையில், “தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராக ஆதவ் அர்ஜுனா இருக்கிறார். அதே சங்கத்தில் நான் சீனியர் துணைத் தலைவராக உள்ளேன். விளையாட்டு வீரரின் கடினமான பாதையை என்னைப் போன்றவர்களுக்குத் தான் தெரியும். அவரை விளையாட்டுத் துறை அமைச்சராக்கிய முதல்வர் விஜயை பாராட்டலாம். ஆனால், அ.தி.மு.க. இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பது வேதனை அளிக்கிறது. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு சங்கப் பதவிகளை வகித்த பின்னரே அமைச்சரானார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு! புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!

மேலும், “இன்பதுரையை அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி கண்டிக்க வேண்டும். என்னை விளக்கம் கேட்டால் உரிய பதில் அளிப்பேன். அதனால் எனக்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனாலும் பரவாயில்லை. எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என சோலைராஜா எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் அ.தி.மு.க.வுக்குள் புதிய பூசலை ஏற்படுத்தியுள்ளது. சோலைராஜா மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தவர். இது தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சோலைராஜா த.வெ.க.வுக்கு தாவி மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் ஊகிக்கின்றன. ஆதவ் அர்ஜுனாவுடன் நெருங்கிய விளையாட்டு உறவு கொண்ட சோலைராஜாவின் இந்த நிலைப்பாடு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் அரசியல் இணைப்பை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!