தமிழக அரசியலில் மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதாகவும், அந்த மாற்றத்திற்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் ஆதரவை இழந்து வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்றும் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனது புதிய அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், பாஜகவில் இருந்து வெளியேறிய முடிவு தனிப்பட்ட பதவி ஆசையாலோ அல்லது அரசியல் லாபத்திற்காகவோ எடுக்கப்படவில்லை என்று விளக்கமளித்தார்.
தமிழகத்திற்கு புதிய அரசியல் கலாசாரம் தேவை என்ற நம்பிக்கையில்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறிய அண்ணாமலை, அரசியல் என்பது வெறும் அதிகாரப் போட்டியாக இருக்கக் கூடாது என்றார். காலம் மாறும்போது தலைவர்களும் மாற வேண்டும் என்றும், இன்று இருக்கும் தலைமையை விட திறமையான இளைஞர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!
தான் தொடர்ந்து தீவிர தேசியவாதியாகவே இருப்பதாக கூறிய அவர், இந்தியாவின் ஒற்றுமை மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், ஒவ்வொரு மாநிலமும் தனது வளர்ச்சிக்காக சுயமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகம் தொடர்பான முக்கிய அரசியல் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே இருப்பது நல்ல அரசியல் அணுகுமுறை அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

பாஜக தலைவர்களுடன் தனது உறவு இனிமேலும் நாகரிகமான முறையில் தொடரும் என்றாலும், அது நட்பான உறவாக இருக்காது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். மேலும், தேசிய கட்சிகள் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கவில்லை என்றும் விமர்சித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பாஜகவை விட்டு வெளியேறுவது குறித்து தீவிரமாக சிந்தித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள அதிமுக தவறிவிட்டதாகவும் அண்ணாமலை கூறினார். தனது புதிய 'வீ தி லீடர்ஸ்' இயக்கம் பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் போல செயல்படாது என்றும், இதில் பதவிக்கால வரம்பு, வயது வரம்பு மற்றும் தலைமை மாற்று முறை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் விளக்கினார்.
தற்போது இந்த இயக்கத்தில் சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகவும், அந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்திய பிறகே அரசியல் கட்சியாக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தேர்தல் அரசியலை விட உறுப்பினர் சேர்க்கை, குடிமைப் பணிகள் மற்றும் தலைமைத்துவ வளர்ச்சியில்தான் கவனம் செலுத்தப்படுவதாகவும், இடைத்தேர்தல்கள் தங்களது இலக்கு அல்ல என்றும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!