சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய், மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களான BMW, TVS உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் முதலீடுகள் மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான விவகாரங்கள் விரிவாகப் பேசப்பட்டன.
தொழில் நிறுவனங்களின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சிரமங்களை முதல்வர் விஜய் கவனமாகக் கேட்டறிந்தார். மாநிலத்தின் தொழில் சூழலை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகளையும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!
இதற்கு முன்னதாக, மாநிலத்தின் நிதி நிலை குறித்து நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தினார். துறை வாரியாக திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு, செலவினங்கள் மற்றும் வருவாய் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் விரிவாகப் பேசப்பட்டன.
மேலும், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அடிப்படை கட்டமைப்பு வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அரசின் நிதி நிலை மற்றும் துறைகளின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். அதனை நோக்கமாகக் கொண்டு தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்க முதல்வர் விஜய் முனைப்பு காட்டி வருகிறார். கார் மற்றும் இரு சக்கர வாகனத் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் நேரடி உரையாடல் நடத்தியிருப்பது மாநிலத்தின் தொழில் துறைக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டங்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமையும் என அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!