திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் அக்கட்சியினுடைய மாநில துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் சந்தித்துள்ளனர். ஏற்கனவே பாமகவில் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் தனித்து செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே. மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸும் இருந்தார்.

இந்த சந்திப்பு என்பது தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ராமதாஸ் உடைய சாய்ஸ் திமுக கூட்டணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?, இந்த சந்திப்பு அது தொடர்பான முன்னெடுப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என பலவகையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கூட செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எனது நண்பர் கருணாநிதி வழியில் மூச்சியிருக்கும் வரை நானே கட்சியின் தலைவர் என்றும், அன்புமணி ராமதாஸ் வேண்டுமானால் ஸ்டாலின் போல செயல் தலைவராக இருந்து கொள்ளட்டும் என்றும் கூறினார். மேலும் ஸ்டாலின் செயல்தலைவராக செயல்பட்டாலும், அப்பாவிற்கு எந்த குடைச்சலும் கொடுக்கவில்லை, அன்புமணி போல் முணுமுணுக்கவில்லை என்றெல்லாம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்துரைத்திருந்தார்.

பாமகவில் மோதல் வெடித்தது முதலே அன்புமணி பாஜக கூட்டணிக்கும், ராமதாஸ் திமுக கூட்டணிக்கும் ஆர்வம் காட்டுவதால் தான் பிரச்சனை பெரிதானதாக கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் திமுகவிற்கு ஆதரவாக ராமதாஸும், எதிராக அன்புமணியும் கருத்து தெரிவித்து வந்தனர். பாமகவில் சர்ச்சை வெடிக்கவே திமுக தான் காரணம் என அன்புமணி கூறியதை முற்றிலும் பொய் என ராமதாஸ் மறுத்திருந்தார். இதுபோன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு மத்தியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய செல்வப்பெருந்தகை ராமதாஸை சந்தித்துள்ளது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!
குறிப்பாக நானே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்பதால் கூட்டணி குறித்து நான் தான் முடிவெடுப்பேன் என்றும் ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வருக்கு மனசாட்சி இருந்தா இத செய்யட்டும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!