தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக எம்பி தயாநிதி மாறன் அவர்களின் கரூர் கூட்டத்தில் பேசிய வார்த்தைகள். கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற ஊர்களையும் கெடுப்பவர்கள் என்று அவர் கூறியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பிளவுவாத பேச்சு என்று குறிப்பிட்டு, பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், "தி.மு.க.வினருக்கு ஆணவம் தலைக்கேறியுள்ளது. கோவை மக்களை அவதூறாக பேசிய தயாநிதி மாறன் உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி எந்த ஜென்மத்திலும் கோவை மண்ணில் திமுக கால் பதிக்க முடியாது" என்று கடுமையாக விமர்சித்தார். கோவை மெட்ரோ திட்டத்தை திமுக அரசு முடக்கியதற்கு இதுவே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.
முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், "கோபாலபுரம் குடும்பத்தை அண்டி பிழைக்கும் தயாநிதிக்கு இத்தனை ஆணவம் இருந்தால், கடும் உழைப்பால் தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மக்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார். கோவை மக்களை இழிவுபடுத்தியதாக கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலை 2.0!! அதிரடி அரசியலுக்கு தயாரான அண்ணாமலை?! பாஜகவில் புதிய பதவி! பறக்குது அதிரடி உத்தரவு!! புதிய வியூகம்!
கோவை மக்களைக் கீழ்த்தரமாகப் பேசிய திரு. @Dayanidhi_Maran அவர்களுக்குக் கடும் கண்டனங்கள்!
நேற்று கரூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பார்கள் எனக் கொங்கு மக்களின் மீது தனக்குள்ள மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார் திமுகவின்… pic.twitter.com/7CVn8hvMiq
— Nainar Nagenthran (@NainarBJP) February 18, 2026
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள், "நம்பி வந்த யாவருக்கும் கொடுத்தது கோவை என்பதே உண்மை வரலாறு. உழைக்கும் கோவை மக்களை அதிகார மமதையில் இழிவாக பேசிய தயாநிதிக்கு வன்மையான கண்டனம். செந்தில் பாலாஜி ரசித்து சிரிப்பது கோவை மீதான அக்கறையை காட்டுகிறது" என்று தாக்கினார். திமுக கோவைக்கு எதுவும் கொடுக்கவில்லை, கெடுத்தது தான் என்றும், கோவை மக்கள் தக்க தண்டனை கொடுக்க காத்திருப்பதாகவும் கூறினார்.
தயாநிதி மாறன் பேச்சு வீடியோ வைரலானதால், கொங்கு மண்டலத்தில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று புகழப்படும் கோவை மக்களின் உழைப்பை கொச்சைப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுக தரப்பில் செந்தில் பாலாஜி போன்றோர் விளக்கம் அளித்தாலும், எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த சர்ச்சை கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு எதிரான அலை ஒன்றை உருவாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கோவை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது!
இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!