சென்னை: தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதில் மூத்த நிர்வாகிகள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் மத்தியில் பதவிகளை கைப்பற்றுவதற்கான போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியை மறுசீரமைத்து, இளம் தலைமுறைக்கு அதிக வாய்ப்பளிக்கும் வகையில் தி.மு.க. தலைமை பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட செயலர் பதவிக்கான அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டதுடன், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அந்தப் பதவியில் இருக்க முடியும் என்ற கட்டுப்பாடும் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!
இதனால் நீண்ட காலமாக மாவட்ட செயலர் பதவிகளில் இருக்கும் பல மூத்த நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வேலு, காந்தி, மஸ்தான், முத்துசாமி, ரகுபதி, ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேரின் மாவட்ட செயலர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 8 பேரின் மண்டல பொறுப்புகளும் கலைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாவட்ட செயலர் பதவியை இழக்கக்கூடிய சில மூத்த நிர்வாகிகள், துணைப் பொதுச்செயலாளர், அமைப்புச் செயலாளர், முதன்மைச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம், இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்புகளை வழங்க வேண்டும் என உதயநிதி தரப்பு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. சுமார் 30 இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
கனிமொழி தரப்பில், உட்கட்சித் தேர்தல் நடத்தி மாவட்ட செயலர்களை தேர்வு செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கனிமொழி, ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, கனிமொழிக்கு அதிகாரமிக்க பதவி வழங்கக் கூடாது என சில கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தி.மு.க.வில் ஒருபுறம் அமைப்பு மாற்றங்கள் வேகமெடுக்க, மறுபுறம் முக்கிய பதவிகளை கைப்பற்றுவதற்கான உள்கட்சி அரசியல் சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இறுதி முடிவு கட்சித் தலைமை அறிவித்த பிறகே தெளிவாகும்.
இதையும் படிங்க: நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!