சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டம் தொடர்பாக, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல்வர் விஜய் பேசியபோது, திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். மேலும், அவசரநிலை காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
முதல்வரின் பேச்சில் இடம்பெற்ற சில உடல் சைகைகள், ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையிலும் நடைபெற்ற போராட்டத்தில் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், உரிய போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் கூறி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் மற்றும் போராட்டம் நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைத் தொடர்ந்து திமுகவினர் நடத்திய போராட்டமும், அதன்பின்னர் போலீசார் மேற்கொண்டுள்ள வழக்குப்பதிவு நடவடிக்கையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!