திருச்சி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனிசாமி, தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக எம்எல்ஏக்களை தவெக தரப்பு தங்கள் பக்கம் அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டிய அவர், மிட்டாய் கொடுத்து குழந்தைகளை அழைத்துச் செல்வதைப் போன்ற நடவடிக்கை என விமர்சித்தார்.
தவெக தனக்கென வலுவான அரசியல் அடித்தளத்தை உருவாக்கவில்லை என்றும் பழனிசாமி கூறினார். அந்த கட்சியின் ஆட்சியில் நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பழனிசாமி தெரிவித்தார். குறிப்பாக நெல் கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், விவசாயிகளின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றும் கட்சி அதிமுக மட்டுமே என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக விஜய் லண்டன் சென்றிருந்தால், இதுவரை எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பதை அரசு விளக்க வேண்டும் என்றார். முதலீடுகளை ஈர்த்ததற்கான புகைப்படங்கள் அல்லது தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தமிழகம் கடன் சுமையில் இருக்கும் நிலையில், அவசரமாக புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பழனிசாமி தெரிவித்தார். அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்தும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து செய்திகளில் இடம்பெறுவதற்கு திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் பழனிசாமி விமர்சித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!