தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில், அதிமுக தனது சட்டமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் (Resort Politics) இறங்கியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கட்டாயம் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்க இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் பலம் 113-ஆக உள்ளது. இதற்கிடையே, அதிமுக-வின் சில எம்.எல்.ஏ-க்களுடன் தவெக நிர்வாகிகள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தச் சூழலில், "குதிரை பேரத்தைத்" தவிர்க்கும் பொருட்டு இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்குப் பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லாமல், அடுத்த 72 மணி நேரத்திற்குத் தலைமைச் செயலகம் அருகிலோ அல்லது கட்சி ஒதுக்கும் இடங்களிலோ தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "கட்சியை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைப்பது எங்களது தற்போதைய முதல் கடமை" என அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக சட்டசபையை கலைத்தார் கவர்னர் அர்லேகர்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஆளுநர் மாளிகையில் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி விஜய் காத்திருக்கும் நிலையில், அதிமுக-வின் இந்த நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-க்களின் செல்போன்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவர்கள் வெளியில் யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது எனத் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்த அரசியல் யுத்தத்தில், அதிமுக-வின் பிடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!