மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, அமைச்சர் என். ஆனந்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த ஞானசௌந்தரி, தமிழக வெற்றி கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் இணையவழி உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகனின் மனைவி ஞானசௌந்தரி, எதிரிகளுடன் இணைந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, அவரை தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதாகவும், இன்றுமுதல் கட்சியின் எந்த நிர்வாகியும் உறுப்பினரும் அவருடன் எவ்வித கட்சித் தொடர்போ அல்லது ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக அரசு மீது விஷக் கணைகள்... கூட்டணி கட்சிகளும் தான் காரணம்.. வைகோ விமர்சனம்..!
இதற்கு முன்னதாக, மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் கு. சியானந்த் ஆகியோரின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்குமாறு உத்தரவிட்டது. மேலும், அவர்கள் மீது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
அந்த வழக்கில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ₹5 லட்சம் முதல் ₹30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக ஞானசௌந்தரி குற்றம்சாட்டியிருந்தார். இந்தச் சூழலில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக ஞானசௌந்தரி நீக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!