தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைவதில் நீடித்து வரும் இழுபறியைக் குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும், மாநிலத்தின் நலனை உறுதி செய்யவும் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (X) பகிர்ந்துள்ள கருத்தில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், பழைய சட்டமன்றத்தையும் ஆளுநர் கலைத்துள்ளார். இத்தகையச் சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாகத் தொடங்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் பரப்புரை! திமுகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு!

மக்கள்தீர்ப்பை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதில் ஏற்படும் தேவையற்றத் தாமதம் மாநிலத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதை திமுக எவ்விதத்திலும் தடுக்காது என்றும், புதிய அரசுக்குச் சில காலம் அவகாசம் அளித்து அதன் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிப்போம் என்றும் அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் (5), இடதுசாரிகள் (4) மற்றும் விசிக (2) ஆகியவற்றின் ஆதரவுடன் 119 என்ற மெஜாரிட்டி இலக்கை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் விஜய் ஆளுநரைச் சந்திக்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள பரபரப்பானச் சூழலில், ஆளுநர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!