தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் பல நாட்கள் கடந்தும், இன்னும் முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இழுத்தடித்து வரும் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் செயல்பாட்டிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் உடனடியாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, நிர்வாகத்தில் நிலவி வரும் குழப்பங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாகப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதுவரை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் காலம்கடத்தி வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு போன்ற ஒரு மிகப்பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொழிலாளர் நலன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மிக முக்கியத் துறைகள் முழுமையான நிர்வாகக் கவனமும், வழிகாட்டுதலும் இன்றி முடங்கிக் கிடக்கின்றன" என்று மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "நெல் கொள்முதல் நிலைய லஞ்ச ஒழிப்புக்கு அதிரடி உத்தரவு": இடைத்தரகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் சாட்டை!
தொடர்ந்து புதிய தவெக அரசின் செயல்பாடுகளைச் சாடிய அவர், "தமிழக மக்கள் தவெக கூட்டணிக்கு மாற்றத்திற்காக வாக்களித்தார்களே தவிர, நிர்வாகத் தாமதங்களை வேடிக்கை பார்ப்பதற்காக அல்ல. அரசு அமைந்த உடனேயே முழுமையான அமைச்சரவையை ஏற்படுத்தி, ஒவ்வொரு துறைக்கும் தகுதியான பொறுப்பு அமைச்சர்களை நியமித்து மக்கள் நலத் திட்டங்களை டாப் கியரில் வேகமாகச் செயல்படுத்த வேண்டியது ஒரு அரசின் அடிப்படை கடமையாகும்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்பட்டு வரும் இந்த தேவையற்ற காலதாமதம் காரணமாக ஒட்டுமொத்த தமிழக அரசின் செயல்திறன் மற்றும் கோப்பு நகர்வுகள் பாதிக்கப்படும் அசுர அபாயம் உருவாகியுள்ளது" என்று எச்சரித்துள்ளார். தவெக அரசு அமைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்களின் லஞ்ச ஒழிப்பு ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில், முழு அமைச்சரவை இல்லாததைச் சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள இந்த அறிக்கை கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லஞ்ச ஊழலுக்கு இடமே இல்லை: மின்வாரிய உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் உத்தரவு!