அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய மூவருக்கும் தீவிர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இம்மூவரும் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்தப் பேச்சு பெரும் பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது.
உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசார் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், நக்சல் ஆதரவு குழுக்கள் மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசார மேடைகளில் செருப்பு, கற்கள் வீசுதல், பெண்களை முன்னிறுத்தி வாகனங்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

இதையடுத்து, மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பயணத் திட்டங்கள் முன்கூட்டியே கண்காணிக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மூவரும் தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் அ.தி.மு.க.வுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்களின் சர்ச்சையான பேச்சு கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பு, மூவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!