சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த பதினைந்து நாட்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வாராந்திர விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெற்றது. பெரும்பாலும் பெண்கள் அடங்கிய இந்தப் பணியாளர்கள், நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் நிலையில் தங்களது பணிப் பாதுகாப்பும் சம்பள உயர்வும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் குரலெழுப்பினர்.போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கிடையே சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டு அரசின் உடனடித் தலையீட்டை வலியுறுத்தினார். அரசுத் தரப்பில் கோப்புகள் தயாராக உள்ளதாகவும் நிதிச் சுமைகளைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் அரசு அமைச்சர்கள் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்று பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் மற்றொரு அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பணியாளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். பேச்சுவார்த்தையின் போது அமைச்சர்கள் பணியாளர்களின் போராட்ட முறையைப் பாராட்டினர். அவர்கள் அமைதியாகவும் ஒழுங்காகவும் போராடியதைச் சுட்டிக்காட்டினர். அரசு அவர்களைக் கைவிடாது என்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.முந்தைய அரசு காலியாக விட்டுச் சென்ற கருவூல நிலையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர்கள், புதிய அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று விளக்கினர்.
இதையும் படிங்க: முதல்வருக்கு தூக்கமே இல்ல..! குறைகள் தீர்க்கப்படும்.. அமைச்சர் ஆதவ் உறுதி..!!
அதனால் சில நேரம் தேவைப்படுவதாகவும் உடனடியாகச் செய்யக்கூடியவற்றை ஆலோசித்துச் செயல்படுத்துவதாகவும் தெரிவித்தனர். முதலமைச்சர் இந்தப் போராட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் பணியாளர்களின் நலன் குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். பணியாளர்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே கருதுவதாகவும் அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதே அரசின் கடமை என்றும் வலியுறுத்தினர்.பேச்சுவார்த்தையின் முடிவில் அரசின் உறுதிமொழிகளை ஏற்றுப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: "கஜானா காலி"..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!