ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் நிர்வாக செயல்பாடுகளில் காங்கிரஸ் மேலிடம் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், கட்சி மேலிடத்துடன் கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவான பிறகு, தொடர்ந்து இரண்டு முறை பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வராக இருந்தார். 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரேவந்த் ரெட்டி முதல்வரானார். கட்சியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு கொண்டு வந்ததில் அவரது பங்கு முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த நிலையில், அரசின் சில முக்கிய முடிவுகளில் கட்சி நிர்வாகிகளுடன் போதிய ஆலோசனை இல்லை என்ற புகார்கள் காங்கிரஸ் மேலிடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரிகுட்டா நரசிம்ம சுவாமி கோவில் அறங்காவலர் குழுவில் நடிகர் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவை நியமித்த விவகாரத்தில் கட்சிக்குள் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அமைச்சரவையில் புதிய முகம்? ராகுல்காந்தி ஆதரவுடன் பிரவீன் சக்ரவர்த்தி அடுத்த ‘பிளான்’!
மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சில நிர்வாக முடிவுகள் தொடர்பாக தங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை என அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா, மாநில காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் உள்ளிட்டோர் அடங்கிய 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான பிரச்னைகளை சரிசெய்வதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், சில துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதிலும், அரசியல் சாராத சில நியமனங்களை மேற்கொள்வதிலும் ரேவந்த் ரெட்டிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் மீனாட்சி நடராஜன் ஹைதராபாத்தில் தொடர்ந்து தங்கி கட்சி நடவடிக்கைகளை கவனிப்பதும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் கட்சி மேலிடம் கட்டுப்படுத்துவதாக ரேவந்த் ரெட்டி தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒருங்கிணைப்பு குழு தனி அதிகார மையமாக மாறக்கூடாது என்றும் அவர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2028 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சிக்குள் நிலவும் இந்த கருத்து வேறுபாடுகளை காங்கிரஸ் மேலிடம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே தற்போது தெலுங்கானா அரசியலில் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ராகுல் எச்சரித்தும் கேட்கவில்லை! திருச்சி காங்கிரசில் கோஷ்டி மோதல்; பொதுக்கூட்டம் ரத்து!