2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி (NTK) 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் 117 பெண்கள் உட்பட அனைவரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் தானே காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தப் பட்டியலில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது ஆறு தொகுதிகளில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது. சென்னை தி.நகரில் அனுஷா, மயிலாப்பூரில் அருண், சைதாப்பேட்டையில் ஸ்ரீவித்யா, ஆலந்தூரில் மகாலட்சுமி, மதுரவாயலில் ரேவதி, மயிலாடுதுறையில் காசிராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிராமணர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மட்டுமே சில தொகுதிகளில் வழங்கி வருகிறது. இந்நிலையில் NTK-யின் இந்த முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி. சேகர் இதை வரவேற்று, "இது சீமானின் சமூக நீதி" என்று பாராட்டியுள்ளார். ஆனால் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பிராமண சமுதாயத்தின் ஓட்டுகளை பா.ஜ.க.-அ.தி.மு.க.விடமிருந்து பிரித்து NTK பக்கம் இழுக்கும் முயற்சி இது. இது தி.மு.க.வை வெற்றி பெற வைக்கும் யுக்தி. படித்த, பண்பாட்டு மிக்க பிராமணர்கள் இவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சீமானின் இந்த அணுகுமுறை திராவிட அரசியலின் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. NTK தமிழ் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், இந்த நகர்வு கட்சியின் வாக்கு வங்கியை விரிவாக்கும் முயற்சியா அல்லது அரசியல் வியூகமா என்பது தேர்தல் களத்தில் தெரிய வரும்.
பிராமண சமுதாயத்தினரின் பிரதிநிதித்துவம் தொடர்பான இந்த முடிவு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது. NTK-யின் இந்த தைரியமான அறிவிப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு!! ஏப்., 2ம் வாரம் சட்டசபை தேர்தல்!! எலெக்சன் கமிஷன் திட்டம்!