சென்னை: ஆந்திராவில் தயாராகும் ‘என்.டி.ஆர் - திரிவிக்ரம்’ என்ற திரைப்படத்தில் தமிழ் இறையோன் முருகப்பெருமானை வடபுலத்தில் பிறந்தவர் என்று சித்தரிக்க முயல்வதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான் தனது அறிக்கையில், “தமிழர் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அவரை வடபுலத்தில் பிறந்தவர் எனக் காட்ட முயல்வது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்த முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இத்தகைய முயற்சிகள் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
தமிழர்களின் பண்பாட்டு மரபை விளக்கிய சீமான், “தமிழ்ப் பேரினம் 50,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இயற்கையைத் தொழுது, மூத்தோரைத் தெய்வமாகப் போற்றும் மரபு தமிழர்களுக்கு உரியது. குறிஞ்சித் திணையின் தலைவனான முருகனை முப்பாட்டன் என அழைத்து வழிபடுவது தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறை” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!

மேலும், “தமிழ்தான் முருகன், முருகன்தான் தமிழ். இரண்டும் பிரிக்க முடியாதவை. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்ட பல நூல்கள் முருகனைத் தமிழர்களின் தனிப்பெரும் இறையோனாகப் போற்றுகின்றன. சேயோன், செவ்வேள், மலைவான், வேலன் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் முருகன் தமிழர்களின் ஆதி தெய்வம்” என்று வலியுறுத்தினார்.
“கடவுளையே கடன் வாங்கிய இனங்கள் தமிழர்களின் தெய்வங்களைத் தங்கள் புராணங்களில் சேர்த்துக்கொண்டு, முருகனை சுப்பிரமணியனாக்கினர், கண்ணனை கிருஷ்ணனாக்கினர். ஆனால் முருகன் இன்றும் தமிழர்களின் தனிப்பெரும் இறையோனாக இருக்கிறார். அவரைத் தமிழர்கள் இழக்கவிட மாட்டோம்” என்று சீமான் உரக்கக் கூறியுள்ளார்.
திரைப்படக்குழு வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்க முயல்வதை ஏற்க முடியாது என்று சுட்டிக்காட்டிய சீமான், “தமிழர்களின் மூத்தோர்களையும், தெய்வங்களையும் இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல, அது நமது பண்பாடு, வாழ்வியல் மற்றும் உயிர் நாடி” என்று வலியுறுத்தினார்.
இந்த அறிக்கை தமிழ் இணைய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் பண்பாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் சீமானின் இந்த எச்சரிக்கை பல தமிழர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "வீட்டுக்கு ஒரு அரசு வேலை"... முதல்வர் விஜய் செவி சாய்க்கணும்..! சீமான் வலியுறுத்தல்..!!