தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஐந்தாண்டு ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் கூப்பன் உள்ளிட்ட பல நலத்திட்டங்களை நிறைவேற்றியதாக ஒவ்வொரு மேடையிலும் ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசி வருகிறார். இந்த திட்டங்கள் தி.மு.க.வுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று அவர் நம்பினார்.
ஆனால், ஸ்டாலின் பங்கேற்ற பல பிரசாரக் கூட்டங்களில் காலி நாற்காலிகள் அதிகமாகத் தெரிந்தன. இதனால், “தி.மு.க.வினரும் கூட்டணி கட்சியினரும் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லையா?” என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது.
இதையும் படிங்க: திமுகவையும், டீக்கடையும் பிரிக்க முடியாது!! இதுதான் நாம வளர்ந்த இடம்!! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
கூட்டம் சேராததற்கான உண்மையான காரணத்தை அறிய உளவுத்துறைக்கு உத்தரவிட்டார். உளவுத்துறை அறிக்கையில், “தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு இருந்த தி.மு.க.வின் செல்வாக்கு, வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு கணிசமாகக் குறைந்துவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மக்கள் மத்தியில் ஆளுங்கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளதை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விரக்தியில் உள்ளார். இதையடுத்து, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து, தான் செல்லும் கூட்டங்களில் அதிக அளவில் தொண்டர்களை கூட்டச் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, தன் மருமகன் சபரீசனை களத்தில் இறக்கியுள்ளார். சபரீசனுக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் திருவள்ளூர் சென்ற சபரீசன், தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அழைத்துப் பேசினார். கூட்டங்களை பெரிய அளவில் சேர்க்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலர்களையும் எச்சரித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், தி.மு.க. தலைமை கூட்டம் சேர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் திரளை அதிகரிப்பதே தற்போது கட்சியின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலையிட்டும் தீராத பிரச்னை! கருணாஸ் கண்ணீர்! கழட்டிவிட்ட திமுக நிர்வாகிகள்!