ஆலப்புழா: மத்திய அமைச்சர் சுரேஷ்கோபியின் எளிமையான செயல்பாடு தொடர்பான சம்பவம் கேரளாவில் கவனம் பெற்றுள்ளது. ஆலப்புழாவில் நடைபெற்ற தனியார் நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி முடிந்ததும் தனது அதிகாரப்பூர்வ கார் வராததால், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தார்.
ஆனால், கார் உடனடியாக வராத நிலையில், அருகே வந்த ஆட்டோவை அழைத்து அதிலேயே பயணம் செய்ய அமைச்சர் முடிவு செய்தார். இதனால் அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரப்பூர்வ வாகனம் விரைவில் வந்துவிடும் என அவர்கள் தெரிவித்தபோதிலும், சுரேஷ்கோபி ஆட்டோவில் பயணிப்பதைத் தொடர்ந்தார்.
அமைச்சர் ஆட்டோவில் செல்வதைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனங்களும் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆட்டோவில் முன்னாள் எம்.பி. ஆரிப் வீட்டுக்குச் சென்ற சுரேஷ்கோபி, அங்கு இறங்கியபோது ஆட்டோ டிரைவருக்கு ரூ.1,000 வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி! சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!
பின்னர் முன்னாள் எம்.பி. ஆரிப்பை சந்தித்து சுரேஷ்கோபி பேசினார். இதற்கிடையே அவரது அதிகாரப்பூர்வ கார் அங்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து அந்த காரில் ஆலப்புழா ரெயில் நிலையத்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து வந்தே பாரத் ரெயில் மூலம் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டார்.

சுரேஷ்கோபிக்கு இதுபோன்ற சூழல் ஏற்படுவது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சூரில் உள்ள வடக்குநாதன் கோவில் மற்றும் ஹரிப்பாட்டில் உள்ள மன்னாரசாலை கோவில் நிகழ்ச்சிகளின்போதும் இதேபோல் அதிகாரப்பூர்வ வாகனம் தொடர்பான சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் மத்திய அமைச்சரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கு போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அமைச்சர் செல்ல வேண்டிய நிகழ்ச்சி இடத்துக்கு வழிகாட்டி வாகனம் மற்றும் பாதுகாப்பு பணியாளர் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அதிகாரப்பூர்வ கார் நிகழ்ச்சி இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
அமைச்சர் வெளியே வந்தபோது கார் அருகில் இல்லாததால், அவர் ஆட்டோவில் சென்றதாகவும், பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் ஏற்படவில்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஒரு மத்திய அமைச்சர் பாதுகாப்பு வாகனங்களை விட்டுவிட்டு ஆட்டோவில் பயணித்த காட்சியும், பின்னர் டிரைவருக்கு ரூ.1,000 வழங்கிய தகவலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவோடு கை கோர்த்தது திமுக?! தொகுதி மறுவரையறை மசோதாவின் போது வெளிநடப்பு செய்ய திட்டம்?- நிர்மல்குமார்!