2029 மக்களவை தேர்தலை குறிவைத்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இந்த முகாமில் அரசியல் பயிற்சிகளுடன், தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளும் கவனம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் ‘சங்கதன் ஸ்ரிஜன் அபியான்’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மீர் தொடங்கி வைத்தார். இதில் 71 மாவட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கட்சி அமைப்பு தொடர்பான பிரச்னைகள் காரணமாக அங்கிருந்து மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..! மாணவர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு... ராகுல் காந்தி காட்டம்..!!
அரசு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் நடைபெறும் இந்த முகாமுக்காக 45 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் வழங்கப்பட்ட உணவுகளில் மீன் குழம்பு, சிக்கன் வறுவல், நெத்திலி பிரை, நெய் சோறு, இறால் தொக்கு உள்ளிட்ட அசைவ உணவுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. காலை நேரங்களில் இட்லி, தோசை, பொங்கல், மசால் வடை உள்ளிட்ட உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இடைவேளைகளில் பழச்சாறு, சமோசா, பழச்சாலட் உள்ளிட்ட சிற்றுண்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கருத்தரங்குகளுடன் உடல்நல பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் உடற்பயிற்சியாளர் அருண் மற்றும் தமிழக காங்கிரஸ் விளையாட்டு பிரிவு தலைவர் நிசார் ஆகியோர் மாவட்ட தலைவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
தினமும் 20 தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சி, மக்கள் தொடர்பு உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனைகளை வழங்குகின்றனர். டெல்லியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முகாமின் ஒரு பகுதியாக மாவட்ட தலைவர்கள் நேரடியாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் தலா நான்கு மாவட்ட தலைவர்கள் ஒரு நாள் தங்கி, மக்களின் பிரச்னைகளை கேட்டறிய உள்ளனர். அங்கு பொதுமக்களுடன் கலந்துரையாடி பெறப்படும் கருத்துகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ராகுல் காந்தியிடம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2029 தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த பயிற்சி முகாம், தமிழக காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பறிபோன 21 இளம் உயிர்கள்... அரசின் பெரும் தோல்வி..! தர்மேந்திர பிரதான் பதவி விலக மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்..!!