சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மேற்கொண்ட மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, அரசு போக்குவரத்து கழக பஸ்களின் முகப்பில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் நீக்கப்பட்ட இந்த பெயர், தற்போது சி.என்.ஜி. பஸ்களில் மீட்டெடுக்கப்பட்டிருப்பது பலரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, மற்ற ஆறு கழகங்களின் பஸ்களின் முன்பக்கத்தில் 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்' என்று பல ஆண்டுகளாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் 'தமிழ்நாடு' என்ற சொல் நீக்கப்பட்டு வெறும் 'அரசு போக்குவரத்து கழகம்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டது. இந்த முடிவுக்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Breaking! திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 500 மின்சார பஸ் டெண்டர் ரத்து! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தவெக அரசு!
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையிலான தொண்டர்கள் அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டம் நடத்தினர். இருப்பினும் அப்போது அந்த மாற்றம் தொடர்ந்தது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த வாரம் அரசு சி.என்.ஜி. பஸ்களில் 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை மீண்டும் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பஸ்களில் பெயர் சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “சி.என்.ஜி. பஸ்களுக்கு மட்டும் இந்த உத்தரவு வந்துள்ளது. மற்ற பஸ்களுக்கும் 'தமிழ்நாடு' என்று சேர்ப்பது குறித்து இன்னும் உத்தரவு வரவில்லை” என்றனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக இருந்து வந்த 'தமிழ்நாடு' என்ற அடையாளத்தை மீண்டும் கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்து அரசு பஸ்களிலும் இந்த பெயரை சேர்க்க வேண்டும். குறிப்பாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதை தெளிவாக அறியும் வகையில் இந்த மாற்றம் அமையும். பயணிகளுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் இது உதவும்” என்றனர்.
தமிழ்நாட்டின் பெருமையை, பண்பாட்டை பிரதிபலிக்கும் இந்த சிறிய மாற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய அரசு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழ்நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!