பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணத்தில் 'சிங்கப்பெண்ணே எழுந்துவா' என்ற தலைப்பில் விழுப்புரம் அடுத்த கொய்யாத்தோப்பு கிராமத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி அவர்கள், தமிழக அரசின் மதுவிலக்குக் கொள்கை மற்றும் டாஸ்மாக் விற்பனை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
டாஸ்மாக் கடைகளைத் திறந்து, நம்மிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் நம்மிடம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள்" என்று சவுமியா அன்புமணி அவர்கள் குற்றம் சாட்டினார். தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ₹700 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் தற்போது படிப்பில் கடைசி மாவட்டமாகவும், டாஸ்மாக் விற்பனையில் முதலிடத்திலும் உள்ளதாகத் தெரிவித்தார். குடியைக் கொடுத்துவிட்டு, பணம் வந்தால் போதும் என ஆட்சியை நடத்துகின்றனர்" என்றும், தமிழகத்தைக் குடிகார நாடாக மாற்றிவிட்டனர் என்றும் அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: "உத்தியோகம் பெண்களுக்கும் இலட்சணம்": திராவிட அரசின் மகத்தான சாதனை - உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
திருமண மண்டபங்களிலும் அனைவரும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், பாளையங்கோட்டைப் பகுதியில் 9-ம் வகுப்பு மாணவிகள் மது குடிக்கும் காட்சிகள் வெளியானது மிகப் பெரிய அவமானம் என்றும் அவர் குறிப்பிட்டார். 6 வயது குழந்தை முதல் 80 வயதுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அரசுப் பள்ளிகளில் போதைப் பழக்கம் அதிகம் உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றும், பெண் குழந்தைகள் மற்றும் தாலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறி வருவதாகவும் சவுமியா அன்புமணி குறிப்பிட்டார்.
வன்னியர்களுக்காக நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 13 தியாகிகளின் எண்ணம் நிறைவேறவில்லை என்று வேதனை தெரிவித்தார். முன்னதாக, விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தில் உள்ள தியாகிகளின் நினைவுத் தூணில் அவர் அஞ்சலி செலுத்தினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றும், கணக்கெடுப்பு நடத்தி, அதற்கேற்ப இடப் பங்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் பேசினார். பாமக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக், போதை மற்றும் கள்ளச்சாராயத்துக்குப் பூட்டு போடப்படும் என்றும், படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வெற்றியின் உச்சம் தெரியுமா?" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!