“ஓரணியில் தமிழ்நாடு” என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது;

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டங்களை உங்களில் ஒருவனான நான் மேற்கொண்டு வருகிறேன். இரண்டு நாட்களாக வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இதையும் படிங்க: கடவுள் பெயரை மிஸ்யூஸ் செய்யுறாங்க.. முருகர் பக்தர்கள் மாநாட்டை வச்சு செய்த முதல்வர்!
உங்களில் ஒருவனான நான் பாராட்டுகளில் மட்டும் மயங்கிடாமல், விமர்சனங்களையும் வரவேற்கிறேன். அந்த விமர்சனங்களில் உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.
பொதுமக்களுக்கான அரசாகத் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வரும் நிலையில், இப்படியொரு அரசு அமைந்திடவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பத்தாண்டுகளாகப் பாடுபட்ட கழகத் தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதை ஒருபோதும் மறந்ததில்லை.
மக்களின் கோரிக்கைகளைக் கேட்பது போல. கழகத்தினரின் மனக்குரலை அறிந்துகொள்வதற்காகத்தான் அறிவாலயத்தில், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஒரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை உங்களில் ஒருவனான நான் தொடங்கி வைக்கிறேன்.
தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கான செயலியை அறிமுகம் செய்து, 234 தொகுதிகளிலும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் தொழில்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜூன் 25 அன்று அண்ணா அறிவாலயத்தில் சிறப்பான முறையில் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.
இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள கழகத்தின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட ஒன்றிய நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து ஒரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் வேறெந்த இயக்கமும் செய்யாத அளவில் 68 ஆயிரத்துக்கும் அதிகமான டிஜிட்டல் வீரர்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. கழகத்தின் தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களைக் கொண்டு ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பார்கள்.
இந்த செயல் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது குறித்து ஆலோசனைகளை வழங்கிட இன்று ஜூன் 28 மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பு அணிச் செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருடனான காணொலிக் கூட்டம் நடைபெறுகிறது.
ஓரணியில் தமிழ்நாட்டை ஒருங்கிணைப்பதில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்களை இணைத்துக் கொண்டு, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும், கழக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், 2026-இல் மீண்டும் கழக ஆட்சியை அமைப்பதிலும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற முறையில் அன்பு கலந்த உரிமையுடன் வலியுறுத்துகிறேன்.
தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள் அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. பெருமைமிக்க கழகத்தின் உடன்பிறப்பே வா ! உன்னால் உருவாகும் ஒரணியில் தமிழ்நாடு!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!