தமிழக அரசியல் சூழல் தொடர்ந்து பரபரப்பாக இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவி அர்லேகரை சந்தித்ததை தொடர்ந்து, தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை நேரில் சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொடர் சந்திப்புகள் அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, முதலமைச்சர் பதவியேற்பு விழா தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து விரிவான ஆலோசனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!
சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, இன்னும் ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பை பெறவில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் 113 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கும் விஷயத்தில் ஆளுநர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில், விஜய் இரண்டு முறை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தவெக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரின் திடீர் சந்திப்பு புதிய அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழா நடைபெறுமா, அல்லது மேலும் அரசியல் ஆலோசனைகள் நீளுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் அரசியல் ஆதரவாளர்கள் திரள வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னை மற்றும் தலைமை செயலகம் சுற்றுவட்டாரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வாய்ப்பும் பேசப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த முக்கிய சந்திப்புகளின் முடிவில், தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!