தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதேபோல் ஆளும் கட்சி ஆன திமுக தமிழகத்தில் முதன்முறையாக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. இப்படியாக இரு கட்சிகளும் தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஈஸ்வரனின் கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் இருக்கின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தான் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இருக்கிறது. அந்த கட்சி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

மேலும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவின் ஆதரவும் இருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் யாரும் வெளிப்படையாக இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். மேலும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசி உள்ளார்.

திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருமாவளவன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் திருமாவளவனை தனியாக சந்தித்து பேசி உள்ளார். மேலும், தான் எழுதிய புத்தகத்தையும் திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதை அடுத்து இருவரும் தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரை மணி நேரத்திற்கு மேலாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைக்க முயற்சியா? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!