மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்க வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அம்மாநில அரசு உரிய மரியாதை அளிக்கத் தவறியதைக் கண்டித்து, பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது அமைச்சர்கள் யாரும் குடியரசுத் தலைவரை வரவேற்க வரவில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி திட்டமிட்டு அவமதித்துள்ளார் என வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கான இடத்தை, கடைசி நேரத்தில் ஒரு சிறிய இடத்திற்கு மம்தா அரசு மாற்றியுள்ளது. இது பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு, குடியரசுத் தலைவரையே அதிருப்தி அடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திரிணாமுல் அரசு எல்லை மீறிவிட்டது! குடியரசு தலைவர் முர்மு அவமதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி ஆவேசம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவர் மற்றும் முதல் குடிமகன். அவருக்கு அளிக்கப்படும் மரியாதை என்பது நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் கொடுக்கும் மரியாதைக்குச் சமமானது. அவரை அலட்சியப்படுத்துவது ஒட்டுமொத்த இந்தியாவையும் அவமதிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட குடியரசுத் தலைவரை அவமதித்ததற்காக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரௌபதி முர்மு அவர்களிடமும் மற்றும் பழங்குடியின மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு மாநிலத்திற்கு வரும் குடியரசுத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்காக மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்கத் தவறினால், மக்கள் தகுந்த தண்டனை வழங்குவார்கள் என வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசைச் சாடியுள்ள நிலையில், வானதி சீனிவாசனின் இந்த அறிக்கை தமிழக அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி! குடியரசுத் தலைவர் நியமனம்!